Sunday, 16 November 2025

கனவு காணுவீர்!

கனவு காணுவீர்!

கனவு காணுவீர்! கனவு காணுவீர்
புதிய பாரதம் கனவு காணுவீர்!
கலாமின் இளைஞர் காந்திய இந்தியாக் கனவு காணுவீர்!

விதியென வெம்பி வீணாகிக் கிடக்காமல்,
கனவு காணுவீர்! கனவு காணுவீர்!
உலகின் முதன்மை உன்னத இந்தியாக் கனவு காணுவீர்! 
கலாமின் கனவு நினைவாகிடக் கனவு காணுவீர்.

ஊழல் ஓழிந்த உன்னத உலகைக் கனவு காணுவீர்.
ஆளுமை உண்மை  ஆளும் நன்மை
அடையக் கனவு காணுவீர்.
மேலும் மனிதம் வாழும் புனிதம் கனவு காணுவீர்.
நாளும் புதுமை போலும் இளமை இந்தியாவைக் கனவு காணுவீர்

ஏழ்மை யில்லா உலகினைக் கனவு காணுவீர்! 
இந்தியத் தலைமை ஏற்கு முலகைக்
கனவு காணுவீர்! 
அறிவியல் மேலாண்மை இந்தியாவைக் கனவு காணுவீர்.
பாழ்மை யில்லாப் படைப்பு உலகைக் கனவு காணுவீர்! 

இயற்கை வேளாண்மைக் கனவு காணுவீர்!
தரிசில்லாப் பசுமைப் பூமிக் கனவு காணுவீர்! 
பசுமை யெங்கும் பரவிய நிலங்கள்
கனவு காணுவீர்! 
நதிக ளெலாம் கைகோர்த் தோடிடக்
கனவு காணுவீர்!

வரண்ட பூமி வையம் காணாக் கனவு காணுவீர்.
பரந்த வயல்கள் பாரெங்கும் பரவக் கனவு  காணுவீர்.
பகைமை அறியாப் பாச உலகைக்,
கனவு காணுவீர்! 
சுயநலம் இல்லாச் சுற்றம் சூழக் கனவு காணுவீர்!

அச்சம் மறந்த உலகைக் காணக்
கனவு காணுவீர்! 
வீடுவாசல் பூட்டிடா விடுதலை காண
கனவு காணுவீர்! 
நடுச் சாமமும் பெண்கள் நடமாடிடக்
கனவு காணுவீர்! 
நகைப் பணம் ஆசை ஒழியக்  கனவு காணுவீர்! 

விலைவாசி ஆளுமை விவசாயி ஆளக் கனவு காணுவீர்! 
வேளாண்மைச் செருக்குத் தாளாண்மைக் கனவு காணுவீர்! 
வேலையிலா அவலம் ஒழியக் கனவு காணுவீர்! 
உழையாத் திருடர் உழைத்து வாழக்
கனவு காணுவீர்! 

இலவசச் சலுகை  ஏங்காச் சமூகம் கனவு காணுவீர்! 
விலையில்லா ஓட்டு விளங்கும் அரசியல் கனவு காணுவீர்!
பிச்சைக்கு அலைந்திடும்  பாவம் ஒழியக் கனவு காணுவீர்!
நடைபாதைக் குடும்பம் நாடறியா 
உண்மைக் கனவு காணுவீர்!

சமாதானம் சமத்துவம் உலகைக்
கனவு காணுவீர்!
சாதி மதப் பேதம் ஓழியக் கனவு காணுவீர்! 
அந்நியம் மறந்த ஒன்றியம் உலகை
கனவு காணுவீர்!
எல்லோ ரெல்லாம் பெற்றோ மென
கனவு காணுவீர்!

பாலியல் வன்கொடுமை வேறோ டழியக் கனவு காணுவீர்! 
கொலைக் களவுக் கொடுமைக் குற்றம் நீங்கக் கனவு காணுவீர்! 
தனியொரு மனிதர்கும் உணவிலா வறுமை ஒழியக் கனவு காணுவீர்!
பிணி யில்லா உலகம் பேறாய்க் காண கனவு காணுவீர்! 

வானங் கீழேவாழும் உயிர்கள் யாவும் உறவெனக் கனவு காணுவீர்! 
நல்லோர் வல்லோர் நாடாளும் உண்மை கனவு காணுவீர்!
காந்தி காமராசர் கக்கன் போன்ற
கடவுள்கள் ஆளக் கனவு காணுவீர்!
இளைய பாரதம் இதுவே சமயம்.
இப்போதே கண் விழியுங்கள்.

கவிஞர்.கொ.பெ.பிச்சையா.

Wednesday, 15 October 2025

கண்ணும் கண்ணும்

கண்ணும் கண்ணும்

கண்ணும் கண்ணும் கண்டும் பேசும்
கண்டவர் காண கண்களும் கூசும்.
இதயம் பேசும் இரகசிய மொழிகள்
உதயமாகும் விழிகளின் வழிகள்.

அக்கம் பக்கம் ஆரிருந் தாலும்
தர்க்கம் செய்யும் தாமிரு காதலும்.
குறிப்பால் அறியும் குறிப்புணர் பயிற்சி 
இறைவனுங் கூட இயற்றிடா முயற்சி..

உண்ணும் விழிகள் உணரும் மொழிகள்
கண்ணும் கண்ணும் கலந்திடும் வழிகள்
ஓசை  அறியா உணர்வின் குறிகள்.
ஆசை அறிந்த கனவின் .வரிகள்.

நேருக்கு நேரே சந்திக்கும் ஏக்கம்
நேருந் தருணம் கலந்திடக் கூச்சம்.
நோக்க நோக்கிக் கவிழ்ந்து திகைக்கும்
ஆக்கும் மொழிகள் மறந்தும் நகைக்கும்.

ஆசைகள் தூண்டி அளாவத் துடிக்கும்
பாசைகள் வேண்டிப் பழகிட நடிக்கும்.
ஓசைகள் தாண்டி ஒளிந்திட முடிக்கும்.
மசியச் சுணங்கி ஒருகண் படிக்கும்.

மௌனம் பேசி சகுனம் கூறும்
கவனம் கூறி கணணில் தேறும்.
கண்கள் கசிந்து தன்னிலை ஆறும்.
எண்ணம் மசிய ஏது ஊறும்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

மெட்டு:பாலும் பழமும் 

இளைஞனே விழித்தெழு"!!

இளைஞனே நீ விழித்தெழு!!

இளைஞனே நீ விழித்தெழு.
எதிர் காலந்தான் அழைக்கிறது.
நாளைய சமூகம் நீயானது.
வேளை இதுதான் உணர்வானது.

எதிரே பார்  தெரிகிறதா.?
புதிராய் விடுகதை புரிகிறதா?
உன்ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃனைச் சுற்றி சதிவலைகள்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ மறைத்து விரிகிறதா?

உல்லாசம் சல்லாபம் எதற்காக?
ஃ கெடுவினை அதற்காக.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ நூறாக்கும் சூழ்ச்சிவலை.
ஃஃஃஃஃஅடிமைப் பழக்கம் அபாயம்
குடிமது போதை அழிமோகம்.
மயக்கிக் கொல்லும் சிற்றின்பம்
மயங்குதல் பாதகச் செயலாகும்.

உடம்பை இரும்பாய் கட்டிடனும்
நரம்பை வலிமைப் படுத்திடனும்.
சுவரில்லாத சித்திரமா!
தவறில்லாத செயல்த் திறமா!

உடம்பு தானே பிரதானம்
கடமை அதற்குள் சன்னிதானம்.
உடலும் அறிவும் வலுவிருந்தால்.
முடிக்கும் செயலும் தெளிவிருக்கும்.

காலம் வெகுதூரம் எதிரே
காத்துக் கிடக்கிற கனவு.
இலக்கைக் குறிவை,! ஓடு!
அடையும் வரைக்கும் ஓயாதே.

விதைக்கும் காலம் விதையாதது,
விளையும் காலம் விளையாது.
முளைக்கும் காலம் நோய்பட்டால்
வளரும் காலமே முடிந்து விடும்.

படிக்கும் நேரம் படித்திடனும்.
பயனுறும் காலம் கணித்திடனும்.
அறிவை ஏற்றி வளர்ந்திடனும்.
திறமை காட்டி உயர்ந்திடனும்.

தன்னை நம்பி முயன்றிடனும்
தன்னையே நம்பி வென்றிடனும்.
வலிமை தானே நம்பிக்கை
எளிமைத் தயர்வை அகற்றிடனும்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

.


Sunday, 12 October 2025

திவினேஸ்

திவினேஸ்

ஒளி மயமான உன்னெதிர் காலம்
வழி நிசமான சரிகமப பாலம்.
பெயரின் பொருளும் அப்படிக் கூறும்.
முயன்றிட மேலும் உயரம் ஏறும்.

திவினேஸ் என்றால் கதிரொளியாகும்
கவினுன் பாட்டோ வானொலியாகும்.
சூரியன் போலே பிரகாச மாயம்
அரங்கம் ததும்பி அகிலம் பாயும்.

ஜீதமிழ் கண்ட திவினேஸ் நாதம்
ஜேதமிழ் வென்ற அமுத கானம்
அந்த மேடை அரங்கேற்ற மேடை
சொந்த மேடை சுழல்பூமி நாளை.

எத்தனை உயரம்  உயர்வாய் புகழை
அத்தனை கவனம் ஆள்வாய் வாழ்வை.
உலகம் உன்னைச் சுற்றிச் சுழலும்.
உறவும் உன்னைப் பற்றி வளரும்.

இனிப்பும் கசப்பும் கலந்த வாழ்வை
ஏற்றார்ப் போலவே சுவைத்து வாழ்க.
ஏழைக் கிழவனுன் தாதாவை சொல்லி
வாழ்வை உயர்த்து அவர்தோள் எண்ணி.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

பருவத் தூண்டல்

பருவத் தூண்டல்.

பருவ வயது உருகுது மனது
உருவம் விலகுது உள்ளம் பழகுது
அரும்பும் மோகம் தகைமை தவறுது.
விருப்பம் போதும் என்றே தேடுது.

வயது தானது வலிய முந்துது.
அறிவு தானது மெலியப் பிந்துது.
சந்திக்கத் துடிக்கும் பாலுணர் வாவது.
சிந்திக்கப் பக்கம் அறிய மறந்தது.

தன்பா லுணர்வைச் சுவைக்கத் தானது,
மறுபா லுணர்வைத் தூண்டி உசுப்புவது,
பெண்பால் ஆண்பால் அறிய இரசிப்பது,
இருபா லுணர்வை எண்ணி உருசிப்பது.

கன்னி இரசனை காதல் முயல்வது,
பின்னி உறவை ஆவல் உணர்வது.
இயல்பின் மர்மம் தெளிய முனைவது,
அயலுணர் ஆர்வம் விளங்க விழைவது.

பேச்சுக்கு முன்னே மூச்சு முந்துது. 
மூச்சுக்குப் பின்னே  வார்த்தை பிந்துது.
காற்றுத் தானது காதல் பேசுது
கதப்பில் தானோ இருமுகம் கூசுது. 

கவிஞர். கொ. பெ. பிச்சையா.


Sunday, 5 October 2025

அப்பாவைப் போல

சுமைதாங்கி.

அப்பாவைப் போல-- அவர் 
அன்புக்கும் மேல 
யாருனு சொல்ல--உலகில்
அவர் போல் இல்ல.
சுமையென எண்ணா--குடும்பம்
சுமக்கும் அப்பா
சுமைதாங்கி தான்னு--உன்னை
சொன்னால் என்ன தப்பா.

நானும் ஏனோ வீணே வம்பு
சேட்டைச் செய்யும் போதிலே,
வானம் மின்னிஇடியும் இடிக்கும் 
கோவம்‌ போலச்,சும்மா நடிப்பார்.
அடியும் அடிப்பார் அதட்டிப் பிடிப்பார்
கண்டிப்ப தாக என்ன லனுக்காக.
அப்புறம் பெய்யும் பாசமழை போல் அன்பைப் பொழிவார் நிசமென் மேல்.

தட்டில் சோறை தானே பிசைந்து 
தடவிக் கொடுத்து ஊட்டுவார்.
அடித்தக் கையை தானே கடிந்து 
அழுவார் பின்னே வருந்தி நொந்து..
பிள்ளை என்மேல் கொள்ளைப் பாசம்
உள்ளம் கனிந்து செல்லம் பேசுவார்.
மெல்லம் மொழியும் செய்யும் சமரசம்
சொல்லு மென்னகை பெய்யும் கனிரசம்

வேளை தவறி உண்ணாமல் வெளியே திரிந்தால் உதையே ஒளிந்தால் பயமே.
அந்தந்த வேளை அந்தந்தச் செயலை
அமையச் செய்தால் சரிதான் நயமே.
பசிதாங்க மாட்டான் பிள்ளை என்றே
பதறிப் பதறித் தேடுவார் அழைத்து
கூப்பிட என்னைத் தாயிடம் சொல்லி
சாப்பிட வைப்பார் பக்கம் அமர்த்தி.

தோளில் சுமந்து உயர்த்திப் பிடித்து,,
தூரம் பாரென உலகைக் காட்டி
நான்தேடா உலகை நீகாண வேண்டும்
நீகண்ட உலகம் நான்வாழ வேண்டும்.
என்றே என்னைத் தூக்கி  ஏற்றி
தன்னைத் தாழ்த்தி என்னை உயர்த்தி
எண்ணம் வென்று உச்சி முகர்ந்தார்.
பின்னே மெச்சி முன்னே மகிழ்ந்தார்.

இருக்கும் போதவர் இம்சை என்றேன்
இல்லாத போது இழப்பு என்றேன்.
பறந்த பின்னே திருந்தி அழுதேன்
இழந்த பின்னே உணர்ந்து தொழுதேன்.
வெற்றிட அருமை விதியிடம் கேட்டேன்.
முற்றிய ஞானம் முதுமையில் படித்தேன்
நிழலின் அருமை வெயிலில் அறிந்தேன்
பழமைப் பெருமை நிலைமை புரிந்தேன்.

கவிஞர்.கொ.பெ.பிச்சையா.
 










Saturday, 4 October 2025

கலை வாழுந்தமிழகம்

தமிழகம்.

கொடையர் ஆண்ட 
படை நாடு வென்றோம்.
கடைக்கோடி மனிதரும் 
கனம் வாழக் கொண்டோம்.
எல்லோரும் எல்லாம் 
இயன்றோம் செல்வம்.
தமிழர் தனிக்கலை
தரணியில் படைத்தோம்.

வள்ளுவன் மறைமொழி
உள்ளம் நிறைத்தோம்.
நல்லவர் வல்லவர் 
வாழ்வியல் படித்தோம்.
வாழ்ந்தது வாழ்ந்து 
வழிமுறை செய்தோம்.
ஔவை செப்பிய 
செவ்வழி நடந்தோம்.

வியந்திடச் செய்தே 
நயங்கலை உயர்ந்தோம்.
முயன்று இலக்கியம்
முன்னணி சென்றோம்.
கம்பன் இளங்கோ
கவிவளம் கண்டோம்.
வென்றும் நின்றோம்
விந்தியம் கடந்தும்.

சோழர் சேரர்
பாண்டியர் வாழ்வியல்
ஆண்ட அருமை
வாழ்ந்த பெருமை.
இமயம் வென்றும்
இயல்பில் வாழ்ந்தோம்.
சமயம் என்றும்
சமத்துவம் என்றோம்.

செம்மொழி மேன்மை
எம்மொழி ஆண்டோம்.
தமிழால் இனித்தோம்
அமிழ்தம் சுவைத்தோம்.
மொழியின் தொன்மை
அழகிய தன்மை.
உலகின் ஒருமை
விலக்கினோம் சிறுமை.
விளங்கும் அமைதி
விளக்கி வாழ்வோம்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.