Sunday, 5 October 2025

அப்பாவைப் போல

சுமைதாங்கி.

அப்பாவைப் போல-- அவர் 
அன்புக்கும் மேல 
யாருனு சொல்ல--உலகில்
அவர் போல் இல்ல.
சுமையென எண்ணா--குடும்பம்
சுமக்கும் அப்பா
சுமைதாங்கி தான்னு--உன்னை
சொன்னால் என்ன தப்பா.

நானும் ஏனோ வீணே வம்பு
சேட்டைச் செய்யும் போதிலே,
வானம் மின்னிஇடியும் இடிக்கும் 
கோவம்‌ போலச்,சும்மா நடிப்பார்.
அடியும் அடிப்பார் அதட்டிப் பிடிப்பார்
கண்டிப்ப தாக என்ன லனுக்காக.
அப்புறம் பெய்யும் பாசமழை போல் அன்பைப் பொழிவார் நிசமென் மேல்.

தட்டில் சோறை தானே பிசைந்து 
தடவிக் கொடுத்து ஊட்டுவார்.
அடித்தக் கையை தானே கடிந்து 
அழுவார் பின்னே வருந்தி நொந்து..
பிள்ளை என்மேல் கொள்ளைப் பாசம்
உள்ளம் கனிந்து செல்லம் பேசுவார்.
மெல்லம் மொழியும் செய்யும் சமரசம்
சொல்லு மென்னகை பெய்யும் கனிரசம்

வேளை தவறி உண்ணாமல் வெளியே திரிந்தால் உதையே ஒளிந்தால் பயமே.
அந்தந்த வேளை அந்தந்தச் செயலை
அமையச் செய்தால் சரிதான் நயமே.
பசிதாங்க மாட்டான் பிள்ளை என்றே
பதறிப் பதறித் தேடுவார் அழைத்து
கூப்பிட என்னைத் தாயிடம் சொல்லி
சாப்பிட வைப்பார் பக்கம் அமர்த்தி.

தோளில் சுமந்து உயர்த்திப் பிடித்து,,
தூரம் பாரென உலகைக் காட்டி
நான்தேடா உலகை நீகாண வேண்டும்
நீகண்ட உலகம் நான்வாழ வேண்டும்.
என்றே என்னைத் தூக்கி  ஏற்றி
தன்னைத் தாழ்த்தி என்னை உயர்த்தி
எண்ணம் வென்று உச்சி முகர்ந்தார்.
பின்னே மெச்சி முன்னே மகிழ்ந்தார்.

இருக்கும் போதவர் இம்சை என்றேன்
இல்லாத போது இழப்பு என்றேன்.
பறந்த பின்னே திருந்தி அழுதேன்
இழந்த பின்னே உணர்ந்து தொழுதேன்.
வெற்றிட அருமை விதியிடம் கேட்டேன்.
முற்றிய ஞானம் முதுமையில் படித்தேன்
நிழலின் அருமை வெயிலில் அறிந்தேன்
பழமைப் பெருமை நிலைமை புரிந்தேன்.

கவிஞர்.கொ.பெ.பிச்சையா.
 










No comments:

Post a Comment