Saturday, 4 October 2025

கலை வாழுந்தமிழகம்

தமிழகம்.

கொடையர் ஆண்ட 
படை நாடு வென்றோம்.
கடைக்கோடி மனிதரும் 
கனம் வாழக் கொண்டோம்.
எல்லோரும் எல்லாம் 
இயன்றோம் செல்வம்.
தமிழர் தனிக்கலை
தரணியில் படைத்தோம்.

வள்ளுவன் மறைமொழி
உள்ளம் நிறைத்தோம்.
நல்லவர் வல்லவர் 
வாழ்வியல் படித்தோம்.
வாழ்ந்தது வாழ்ந்து 
வழிமுறை செய்தோம்.
ஔவை செப்பிய 
செவ்வழி நடந்தோம்.

வியந்திடச் செய்தே 
நயங்கலை உயர்ந்தோம்.
முயன்று இலக்கியம்
முன்னணி சென்றோம்.
கம்பன் இளங்கோ
கவிவளம் கண்டோம்.
வென்றும் நின்றோம்
விந்தியம் கடந்தும்.

சோழர் சேரர்
பாண்டியர் வாழ்வியல்
ஆண்ட அருமை
வாழ்ந்த பெருமை.
இமயம் வென்றும்
இயல்பில் வாழ்ந்தோம்.
சமயம் என்றும்
சமத்துவம் என்றோம்.

செம்மொழி மேன்மை
எம்மொழி ஆண்டோம்.
தமிழால் இனித்தோம்
அமிழ்தம் சுவைத்தோம்.
மொழியின் தொன்மை
அழகிய தன்மை.
உலகின் ஒருமை
விலக்கினோம் சிறுமை.
விளங்கும் அமைதி
விளக்கி வாழ்வோம்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.


No comments:

Post a Comment