கண்ணும் கண்ணும் கண்டும் பேசும்
கண்டவர் காண கண்களும் கூசும்.
இதயம் பேசும் இரகசிய மொழிகள்
உதயமாகும் விழிகளின் வழிகள்.
அக்கம் பக்கம் ஆரிருந் தாலும்
தர்க்கம் செய்யும் தாமிரு காதலும்.
குறிப்பால் அறியும் குறிப்புணர் பயிற்சி
இறைவனுங் கூட இயற்றிடா முயற்சி..
உண்ணும் விழிகள் உணரும் மொழிகள்
கண்ணும் கண்ணும் கலந்திடும் வழிகள்
ஓசை அறியா உணர்வின் குறிகள்.
ஆசை அறிந்த கனவின் .வரிகள்.
நேருக்கு நேரே சந்திக்கும் ஏக்கம்
நேருந் தருணம் கலந்திடக் கூச்சம்.
நோக்க நோக்கிக் கவிழ்ந்து திகைக்கும்
ஆக்கும் மொழிகள் மறந்தும் நகைக்கும்.
ஆசைகள் தூண்டி அளாவத் துடிக்கும்
பாசைகள் வேண்டிப் பழகிட நடிக்கும்.
ஓசைகள் தாண்டி ஒளிந்திட முடிக்கும்.
மசியச் சுணங்கி ஒருகண் படிக்கும்.
மௌனம் பேசி சகுனம் கூறும்
கவனம் கூறி கணணில் தேறும்.
கண்கள் கசிந்து தன்னிலை ஆறும்.
எண்ணம் மசிய ஏது ஊறும்.
கவிஞர். கொ. பெ. பிச்சையா.
மெட்டு:பாலும் பழமும்
