Thursday, 30 January 2025

கனியும் பருவம்

கனியும் பருவம்.

சின்னச்சின்னக்குழந்தையாம்
அன்ன வண்ணக் கிண்ணத்தில்.
திண்ணையொன்றில் ஓடியாடி...
அன்னையவள் சோறூட்ட.......
அந்தவேளை நானுமே
அவ்வழியே சென்றிட...............

முன்னப்பின்னே அறியாத.......
என்னைப்பார்த்துச்சுட்டியே
"தாத்தா" என்றே விளித்தது..........!

"மாமா" என்றும் சொல்லவில்லை.
"அண்ணா"வென்றும் தோன்றவில்லை.
"தாத்தா" எனக் கண்டதும் எப்படி?

வீட்டுக்குத் திரும்பினேன்.
வீட்டாளை வினவினேன்.
காட்டியது என்னடி ...........
கண்டு சொல் என்றதும்
நாணத்தில் கோணினாள்
"நானெப்படிச் சொல்லுவேன்"
என்றாள்

"தோணவில்லை அப்படி
ஆனாலும் குழந்தையோ
அறியாது பொய்யுரை!"
என்றாளே என்னவள்
சென்றதென் கனவுகள்!

என்னவிது விந்தையென
கண்ணாடி முன்னின்று
என்னை நான் தேடினேன்!
வாலிபம் முடிந்த அந்த
வரலாறும் புரிந்தது!
வயதான பதிவுகளும்
வளருவதும் தெரிந்தது!

அங்கங்கு வெள்ளைமுடி
சிங்காரமாய் ஒளிர்ந்தது!
முத்தலாகும் இளநியாக
முக அழகும் தளர்ந்தது!

தாடையது சாடையாக
தாழ்ந்து நிலை சொன்னது!
"கோடையின்னும்
நெருங்கவில்லை!
கூடி மகிழத் தடையுமில்லை!
முத்தினால் சத்துத்தான்!
வித்தைகள் பத்திரம்!
விளையாடு நித்தமும்!"

கனியும் பருவமோ!
இனித்திடும் இன்னுமோ!
அனுபவ முதிர்ச்சியோ!
அதிலென்ன அதிர்ச்சியோ!
இளமைதான் முத்தியதோ!
வளமையும் கூடியதோ!
வாலிபம் என்பதெல்லாம்
போலிதான் புரிந்ததோ!

கொ.பெ.பி.அய்யா.

சிம்மம் குரலுக்கு அஞ்சலி.

சிம்மக் குரலுக்கு அஞ்சலி!

மாலைச் செய்திகள்
மனம் அழுகச்செய்தது!!
மாலை வெய்யிலாய்
மயங்குமென நம்பினேன்
காலைச்செய்திகள்
கண்ணீரில் நனைந்தன!!

ஆலய மணியோசை
அடங்கியதோ அய்யகோ!
ஆண்டவன் கட்டளையோ!
ஆண்ட குரல் ஓய்ந்ததோ!

ஆறுமனமே ஆறு என்றே
அழைத்தானோ அவனடிக்கே!
பாடும் பாட்டில் மயங்கியதோ!
பரலோகம் கொண்டதோ!

உலகை விட்டுப்போனாலும்
உந்தன் குரல் எம் சொந்தம்!
எட்டுத்திக்கும் எதிரொலிக்கும்
மெட்டுக்குர்ல் கேட்டினிக்கும்!

தமிழ்த தாயும் அழுகிறாள்!
தனித் தமிழ்க் குரலோனே!
தமிழ் அழகு உச்சரிப்பும்
அமிழ்த மொழி கேட்பதெப்போ!

நெற்றி நிறை பட்டையிட்டு
நேர் வரை நேயம் தொட்டு
பற்றி நல் மனித வாழ்வு
பண்புத்தமிழ் மணக்க வாழ்ந்தாய்!

விருதுகள் அத்தனையும்,
விரும்பித்தானே வந்தன,
பெருமைகளும் பெற்றன,
பின்னும அவை வாழ்ந்தன!

சௌந்தர ராஜனே!
சௌந்தர்ய வாச்னே!
சௌண்டுக்கும்  ராஜன் நீ
சாவதும் நீ  இல்லை!
உயிருடல் சொந்தக்காரன்
ஒப்பந்தம் செய்தபடி
உயிரதை மீட்டாலும்
உடலைப் போட்டாலும்
குரல் அவன் சொந்தமென
கொண்டு செல்லக் கூடுமோ!

இறைவனடி சேர்ந்த நீ
இளைப்பாரி சாந்தி பெறு!
மறையாது உன் குரல்
மண்ணும் விண்ணும் ஒலிக்குமே!

கவிஞர்.கொ.பெ.பிச்சையா.

















காலைப் பொழுது.

காலைப்  பொழுது.

சின்னஞ் சிறு பொழுதது,,
சேவல் கூவி எழுப்புது.
கண்ணங் கருமைக் கரைகிறது
கதிரவன் வரவு வளர்கிறது.

ஊதல் காற்று இதமாக,
உலவ வருகுது பதமாக,
பறவைகள் கூடிப் பாடியே
பரவும் வரவும் செய்கிறது.

பனியில் இரவு நனைந் துதான்,
பாவம் முழுதும் 
குளிர்ந்துதான்!
மெல்லப் போர்வை யிருள் விலகும்.
கள்ளத் தனமாய் கதிர் நுழையும்.

மங்களப்  பாவையர் கூடி
மஞ்ள்  பூசி நீராடி,
தங்ககள் வீடு தலை வாசல்
எங்குங்கோலம் வரைகிறார்.

ஆழ்ந்த நல் லுறக்கமோ!
ஆதவன் கண் சிவந்தான்.
வாழ்வாதாரம் தேடும் பாவை
வழியேநின்று வரவேற்போ!

கொ.பெ..பி.அய்யா.









Wednesday, 29 January 2025

பிறந்த நாள் வாழ்த்து. ஐக்

பிறந்த நாள் வாழ்த்து.(பொதுவாக)

உலகம் பிறந்ததும் உனக்காக.
உன்னை ஈன்றதும் அதற்காக.
பழகும் மனிதம் உறவாகசெய்
பந்தம் அதனில் ஒன்றாக.

ஒருதாய் பிள்ளை நாமென்போம்.
ஒன்றே நமக்குள் மரபென்போம்.
இயற்கை ஒன்றே இறையென்போம்-இங்கு.
எல்லாம் நமதே மொழியென்போம்.

சுழலும் காலம் உனக்காக
சுழட்டும் நாட்கள் நீ வளர்க!
நாளை என்பதும் உனக்கல்லநல்ல
நாளும் இன்றே நீ தொடர்க!

உணவு என்பது உடலுக்கு
உடலும் வளர்வது உயிருக்கு.
உயிர் என்பதும் உழைப்புக்குநீ
உழைப்ப தென்பது உயர்வுக்கு.

வேலை தேடல் வீண்வேலை.
வேலை கொடுப்பது உன்வேலை.
நாளை நீயொரு முதலாளிஉன்
ஆலையி லாயிரம் தொழிலாளி.

வாழ்த்தும் என்னை நினைத்திடுக!
வாழ்வில் உன்னைழ்ஜ் ழ் பஸ் ல்ஸன் வளர்த்திடுக!
கைகளை நம்பி செயல்பச்டுக!
காலம் உந்தன் கைவசமே!

கொ.பெ.பி.அய்யா.



செம்மொழி வாழ்த்து.

செம்மொழி வாழ்த்து.

முதலொலியாம் முத்தாம்வளர்மொழியாம்வாய்த்தயிருகண்ணாம்கருவிழியாம்,காலமாம்! -கன்னல் இனிமைவளமைஇளமைவழமை தனித்தசிறப் புள்ள தமிழ்

பிறக்கும் பொழுதே பிறக்கும் ஒலியில் பிறக்கும் உறவும்அம் மாவாம்! - சிறப்பிதுபோல் உண்டோ பிறமொழி ஒன்றிலுமே சொல்லுக! கொண்டதும் செம்மொழி தமிழ்.


அறம்பொரு ளின்பம் அதன்பின் பெறும்பேறும் அன்ன பெருமை அனைத்தும்திறமாய் அமைந்தும் வளமாய் நிலமதில் வாழும் அருமைத் தமிழே சிறப்பு

பன்மொழி ஏற்றுப் பதித்த இலக்கியங்கள் தண்பொலி வேற்றி வளர்ந்துமேதன்னிலைத் திண்ணமும் தேறியும் முன்னிலைப் போற்றியும் செழுந் தமிழ் வாழ்க!வாழ்க!



கொ.பெ.பி.அய்யா.

மெய்யன் காந்தி.

மெய்யன் காந்தி!

அண்ணலாம் தயாபன்
அகிலம் புகழ் வியாபன் -முக்திவழிப் பக்தியன்னார்
மெய்யன் நெறிக் காந்தி மகான்.

உயிர்கள் மேல் உயர் நேசன்.
உலகெலாம் உணர் வாசன்.
தூய்மை வாழ் இராம தாசன்
தாய்மை போல் ஆண்ம ராசன்.

வாய்மைக் காத்து வாழ்ந்தவர்
நேர்மைப் பூத்த நிமலனவர்.
சத்தி யத்தின் புத்தனவர்
உத்த மத்தின் பக்தனவர்.

அடிமைத் தளை அறுத் தாரவர்
அந்நியத்தை மறுத்தா ரவர்.
அகிம்சை வழி நின்றா ரவர்.
அற வாழ்வு வாழ்ந்தா ரவர்.

கத்தி யில்லா யுத்தம் ஒன்று,
சத்தி யத்தின் வழி நின்று,
வெற்றி கொண்ட வித்தகர் என்று;
விண் ணதிர்ந்த உண்மையும் ஒன்று.

புத்தன் ஏசு நபிகள் போன்றோர்,
உத்தம் காந்தி அவதார சான்றோர்,
மனிதம் தவறிய அவசரக் காலம்,
புனிதர் தோற்றம் ஜெயந்திக் கோலம்.
















வொரு ராசன்`
செந்நாப் பொழி
மொழி ஏசன்
உள்ளும் ஊறும்
இனிய சொலைக்
கூறும் நலம் கொள்வார்
ஆரே அண்ணல் தானே!

மண்ணை நேரை
வெல்லலுஞ் சீரை
வாற் கொண்டெழுவுஞ்
சினப் போரை-தனை
நேரில் மோதும்
தனிச் சேனை
முன்னே தானே
ஆனே எனக் கோனே!

இல்லை வேறை
ஒத்தும் தாரை.
வேர்க்கொண் டெழுந்து
வினை தீர யவர்
சத்தி யம்சோ
தனைத் தானே
சாந்தி காந்தியம்
நன்றே யது வென்றே!

பத்துக் கெலாம
அயல் தேடும்-நித்தம்
அலைவ தேனோ!
நிலை தானோ!
சுய இராட்டைப்
போல் சுழன்று
ஆன்மக் காந்திநின்று
வாழ்வீர் வாழ்ந்தாவீர்!

முல்லைச் சீரை
ஒத்த ஆடை--திரை
இல்லை மேலே
ஒரு சீலை
வெள்ளைத் தானும்
வினை பேணும்
நேர்மைச் செம்மை
அய்யே-நீ-மெய்யே!

விண்ணிற் தொலைந்ந
விளை நாசம்.
மன்னா நிலைப்
புவித் தோசம்
தகா மோசம்கொண்டும்
பேதம் செயும் வதை
தீரும் நலம் ஆகும்.
நாடே--கேள் இப்போதே!

எண்ணிற் பெறாத
உயர் வாசன்--பெற்றப்
புதல் வரான
கனம் பேசான்.
சுயம் போற்றத்
தான் மறந்து
தேயம் தன்னிறைந்த
தேசன்-புவி-தாசன்.

மண்ணிற் கிசைந்த
மன வாசன்.
கண்ணா னிணைப்
புவி ராசன்?
நேசன்-மீண்டும்
வர வேண் டுமே
நாளு முனைத் தேடும்
மோகன் இனித் தாயன்

கொ.பெ.பி.அய்யா.  









விளையும் பயிர்.

விளையும் பயிர்!

அன்று குழந்தையாய் அன்னை மடி சிரித்திருந்தான்.
இன்று செல்வத்தாய் அவன் மடியில் சிரிக்கின்றாள்.
தத்தித் தவறி விழுந்தெழுந்து எழுந்திட முயல்கின்றான்--இன்று
புத்திக்கு எட்டுந் தூரம் 
 போயுமே வருகின்றான்.

விளைகின்ற பயிரொன்று முளையிலே தெரியுமே!
நுழைகின்ற வழி நன்றே 
விழியினிற் புரியுமே!
தாளிலே தங்கம் மறைத்து,
ஒளித்துமே வைத்தாலும்:
தாளைத் தூரம் தள்ளி விட்டு
தங்கத்தைத் தேர்ந்திடுவான் .

தாளினைத் தள்ளி விட்டுத் தங்கம் எடுப்பான்.
தாய்க்கதை மாட்டிவிட்டு 
முத்தங்கொடுப்பான்,
தந்தையவர் இறந்தாலும்,
தாயவள் வளர்த்தாலும்,
முந்தையவர் பேர்விளங்க ;விந்தையே செய்கிறான்.

அசைவுகள் கவனித்தான் அர்த்தங்கள் தேடினான்.
இசையாதச் செயலையும்
ஏனெனத் தேடினான்.
எழுப்பிடும் வினாக்களை 
என்னென்று ஆய்கிறான்.
மழுப்பிடும் பதில்களை 
மறுவிடை வினவுகிறான்

பள்ளியிற் பயின்றதை 
உள்ளெடுத்து உணர்கிறான்.
உள்ளென்ன இருப்பதோ!உள்ளமதில் தேர்கிறான்.
அதுவென்ன இதுவென்ன விளங்கிட முனைகிறான்.
அறிவினைப் பெருக்கவே 
அறிந்திடத் தேடுகிறான்.

எதையுமே எடுப்பிலே 
ஏற்கவுந் துணியமாட்டான்.
அதையுமே அவனாய்ந்து 
ஐயமின்றித் துணிகிறான்.
கூர்மையாம் அறிவினைக் 
குழந்தையிற் கொண்டவன்.
குழந்தையின் தெளிவுக்கே தந்தையும் விடுகிறான்.

ஆர்வத்தின் விழிப்பிலே 
அவனறிந்து கண்டவன்.
நேர்மையாம் நெறியிலே 
வழியினைத் தேர்ந்தவன்.
வேலையைத் தேடாமல் 
வேலைகள் தருகிறான்.
சளைக்காமல் உழைப்பிலே கோபுரமாய்  உயர்கிறான்.

நூறான குடும்பஙகளின் சோறாகித் தாயுமானான்.
பேறு பெற்ற தாயவளின் 
பிள்ளையாய்ப் பேரானான்.
தன்திறன் தன்னை நம்பித் தன்னறிவில் உயர்கிறான்.
தந்தையவன் தவப்பயனால் விந்தையாகிவிளைகிறான்.

இரண்டு பத்து வயதினிலே 
எழுகிறான் முனைகிறான்.
இன்றுவரை வென்று உச்சி
நின்றுமே சிறக்கிறான்.
நாலு பத்து வயதுக்குள் 
நாடுகளைக் கற்கிகிறான்.
நாழிகையும் வீணின்றி 
தேடித்தேடி வெல்கிறான்.

இன்னும் எட்டுந் தூரந்தொட விண்ணோக்கி
விழைகிறான்.
இரவு பகல் என்றறியா 
எந்திரமாய் உழைக்கிறான்.
நடை பழகும் நாளிலேயே 
விடை தேறிக் கூடினான்.
நாளெல்லாம் ஓடுகிறான் 
நடக்கவும் மறக்கிறான்.

குமாரைப் பெற்றவரின் 
குலதெயவத் தவப்யனோ!
சமரிட்டு வாழ்ந்தக் கதை
சரித்திரம் ஏற்றினானோ!
உதாரணப் புருசனாய் 
ஊர் மெச்ச வாழ்கிறான்!
சதமாகச் சமூகத்தின் 
சாதனை செழிக்கிறான்!

வாழ்க அவன் புகழ்கண்டு, 
வளர்கவே உழைப்பென்று!
வீழ்கவே வறுமை விதி.
ஆள்கவே பெருமை மதி.
சூழ்கவே வளமெங்கும் 
சுதந்திரக் காற்றுண்டு!
வாழ்கவேவாழ்கவே
வாடாத நலங்கொண்டு!

கொ.பெ.பி.அய்யா.





















தென்றல் விடு தூது.

தென்றல்விடு தூது!!

தென் திசைத் தென்றலே
தேன் சுமந்து சீதனமோ!
தமிழ் அவளைக் காணவே.
தனியாகப் பயணமோ!.
வட திசை நோக்கியே
வழக்க மான உலாவாமோ!
பொதிகை மலைப் புறப்பட்டு.
போகும் வழி தூரமோ!

அகத்திய முனிவ ரவர்
ஆசிரம சேவ கனோ!
இகத்தினில் தழிழ் தந்த
இறைவனின் ஏவலனோ!
சுகம் தரப் பிறந்தநீ
சுரந்து வரும் ஆவலனோ!
யுக நலமாய் தமிழுக்கு
உகந்த சுகக் காவலனோ!

தாமிர பரணி ஆற்றில்,
தலை மூழ்கிக் குளித்துமே,
தேமதுர தமிழ் அணங்கை;
தேடி நீயும் செல்வாயோ!
குற்றாலச் சாரலிலே
குளிர்ந்து நீயும் சுகமாக,
அருவி யெலாம் நீராடி;
அப்புறமே தொடர் வாயோ!

நெல்லையில் அல்வாவும்,
நீ வாங்க மறப்பாயோ!
எல்லையில் காந்திமதி:
முல்லை சூடித் தொழுவாயோ!
நெல்வயல் நீண்டவழி,
நெடும் பயணம் கடந்துமே;
செல்வனவன் செந்தூரான்:
சேவடிகள் தரிசனமோ!

அலை வாயில் கடலாடி,
ஆண்டவனைக் கலந்தாடி;
அங்கிருந்தே குமரியவள்:
தங்கவொளி சேவிப்போ!
செங் கதிரோன் தங்கியே,
தூங்கி யெழும் காட்சியோ!
பொங்கும் நல் புத்துணர்வோ!
அங்கந் துள் அகமகிழ்வோ!

உவரி வந்து மாதாவை'
உளங்கனிந்து செபித்துமே,
காயல் பட்டண தர்காவிலே,
காலாற்றி தொழுதுமே!
வெற்றிலைத் தோட்டங்கள்,
சுற்றியும் சுவை மணந்து,
முற்றிய மா பலா வாழை,
பற்றி உடன்  கொண்டுவா!

ஆழக்கடல் தூத்துக்குடி,
ஆழத்தில் முத்தெடுத்து,
ஈழக்கடல் வீரத்தமிழ்,
வாழ்த்தி நீ துணை நாட்டி,
வாழுந்தமிழ் சிதம்ரனார்,
விட்ட கப்பல் தடம் பார்த்து,
கீழக்கரை மீனவரை,
கண்டுங் காயம் ஆற்றி வா!

பாதை யெலாம் உப்பளங்கள்
பரவி யெங்கும் பளபளக்கும்.
வேதனையில் தொழிலாளர்
வெந்துப் புண்ணில் வருந்துவர்.
ஊதி மெல்லப் புண்ணாற்றி,
உழைக்கும் வர்கம் தேற்றியே;
நாதி நீ அவர்க்கு வழி,
நல்லூக்கம் ஊட்டி வா!.

வரும் வழி மணியாச்சி,
வாஞ்சி வீரப் பேராச்சி..
கடம்பூரு போலி வாங்கி
கடந்து வா கொல்லநகர்.
கொல்லம்பரம்பு நல்ல நீர்,
குடிக்க சுவை வெல்ல நீர்;
குறுக்குச்சாலை சேவு திண்ணு:
குடித்துப்பார் வாய் மணக்கும்.

சுற்றியுள்ள ஊரெல்லாம்,
சுதந்திர விளை பூமி.
பற்றி வா தேசப்பற்று,
பரப்பியே தேசமெல்லாம்.
பாஞ்சாலம் ஓட்டப்பிடாரம்,
பக்கமே எட்டையபுரம்,
வ.உசி கட்டபொம்மன்;
வாழும் பாரதி அறிந்துவா!

கர்மவீர்ர் காமராசர்,
கண்ட ஊர் விருதுநகர்,
பரம ஏழை பாதம் தொட்ட;
பழைய மண் எடுத்துவா!
தென் தமிழ் நாடெல்லாம்,
தேடித் தேடிக் கண்டு வா!
சுதந்திர சுவாசமாய்,
இதமாகிப் பரந்து வா!

பக்கம்தான் மதுரையும்
பழந் தமிழ் சங்கத்தூர்.
நிற்குமே நாவில் சுவை,
நிற மல்லி இட்லி துவை.
திக்கெல்லாம் கோபுரங்கள்,
தேவி மீனாள் மகிமைகள்.
சொக்கனாதன் தடாகத்தை,
உக்கிப் போட்டு மூழ்கி வா!

ராமநாதன் பூமிகண்டு,
சேமநாடு சேதுபந்தம்,
தஞ்சை மண் தாண்டியும்
தமிழருமை கண்டாயோ!
காவிரியில் தாகமாற்றி,
கல்லணை கவியேற்றி,
பாவிரிக் களஞ்சியங்கள்:
பார்வையிட்டும் மகிழ்ந்தாயோ!

தஞ்சை நிலம் கொஞ்சி நீ!
நஞ்சை வளம் விஞ்ச நீ!
எஞ்சி வாழும் தமிழெ ரெல்லாம்,
மிஞ்சவே நலம் வாழ்த்து
இன்னும் மெல்ல முன்னே வா!
அன்னை வேளாங் கன்னித் தாய்,
விண்ணுயரக் கோபுரத்தாள்:
வேண்டும் வரம் வாங்கி வா!

பெரும் மழை பெய்யும் பூமி,
வரும் புயல் காக்கும் சாமி,
நாகூர் தர்கா வாழும்,
நாகூர்‌ ஆண்டவர் தீர்த்தம்,
வேண்டிப் பெற வினை தீரும்.
தாண்டிநீ வரவர 
திருவாரூர் தேரு வரும்.
திருவாசகப் பெருமானின் திருத்தலங்கள் கூடி வரும்.

திருவரங்கம் கண்டாயோ!
பெருமாளைத் தொழுதாயோ!
கோபுரத்து அழகதனைக்,
கூவி நீ புகழ்ந்தாயோ!
வீர நாச்சி பூமிகண்டு,
தீரன் சின்ன மலை புகழ்ந்து;
கொங்கு நாடு தமிழ் மணந்து:
தெங்கு நீர் பருகு  வாயோ!

வரும் வழி ஈரோடுதான்,
வாசம் மஞ்சள் மணம் வீசம்,
சுயமரி யாதைத் தந்தை,
பெரியாரின் புகழ் பேசும்.
சேலத்து மாங்கனிக்கு
காஞ்சிபுரம் பட்டுத் தந்து
கடமை கண்ணியம் கட்டுப்பாடு,
அறிஞர் வழிப் பற்றினாயோ!
அவர் புகழ் பாடினாயோ!

சென்னைக் கோட்டைத் தலைவாசல்,
முன்னைப் போர் வியந்தாயோ!
முன்னைப் புகழ் கூவநதி,
இன்னை வாசம் நுகர்ந்தாயோ!
வங்கக் கடல் மெரினாவில்,
சிங்கமவன் அண்ணாவுடன்,
தங்கமகன் எம்ஜியாரும்:
கண்ணுறங்கத் தாலாட்டோ!

நாடெல்லாம் சுற்றி நீ!
காடெல்லாம் பறந்தாயோ!
நதியெல்லாம் ஆடி நீ!
விதி யொன்றும் புரிந்தாயோ!
விவசாயப் பூமி இது,
அவசரத் தேவை அது,
இணைத் தெல்லா நதிகளை;
அணைகளுக்குத்  திருப்புவோம்.

போதுமோ சுற்றுச்சூழல்,
பூமியிது வாழ்வதற்கு!
எதிர் காலம் என்னாகும்!
என்பதும்நீ ஆய்ந்து சொல்.
பசுமை பரந்து வளமாக,
வறுமை நீங்கி நலமாக;
புதுமை கண்டு துணிவாக:
புரட்சிவழி ஒன்று சொல்!

கொ.பெ.பி.அய்யா.