Wednesday, 29 January 2025

விளையும் பயிர்.

விளையும் பயிர்!

அன்று குழந்தையாய் அன்னை மடி சிரித்திருந்தான்.
இன்று செல்வத்தாய் அவன் மடியில் சிரிக்கின்றாள்.
தத்தித் தவறி விழுந்தெழுந்து எழுந்திட முயல்கின்றான்--இன்று
புத்திக்கு எட்டுந் தூரம் 
 போயுமே வருகின்றான்.

விளைகின்ற பயிரொன்று முளையிலே தெரியுமே!
நுழைகின்ற வழி நன்றே 
விழியினிற் புரியுமே!
தாளிலே தங்கம் மறைத்து,
ஒளித்துமே வைத்தாலும்:
தாளைத் தூரம் தள்ளி விட்டு
தங்கத்தைத் தேர்ந்திடுவான் .

தாளினைத் தள்ளி விட்டுத் தங்கம் எடுப்பான்.
தாய்க்கதை மாட்டிவிட்டு 
முத்தங்கொடுப்பான்,
தந்தையவர் இறந்தாலும்,
தாயவள் வளர்த்தாலும்,
முந்தையவர் பேர்விளங்க ;விந்தையே செய்கிறான்.

அசைவுகள் கவனித்தான் அர்த்தங்கள் தேடினான்.
இசையாதச் செயலையும்
ஏனெனத் தேடினான்.
எழுப்பிடும் வினாக்களை 
என்னென்று ஆய்கிறான்.
மழுப்பிடும் பதில்களை 
மறுவிடை வினவுகிறான்

பள்ளியிற் பயின்றதை 
உள்ளெடுத்து உணர்கிறான்.
உள்ளென்ன இருப்பதோ!உள்ளமதில் தேர்கிறான்.
அதுவென்ன இதுவென்ன விளங்கிட முனைகிறான்.
அறிவினைப் பெருக்கவே 
அறிந்திடத் தேடுகிறான்.

எதையுமே எடுப்பிலே 
ஏற்கவுந் துணியமாட்டான்.
அதையுமே அவனாய்ந்து 
ஐயமின்றித் துணிகிறான்.
கூர்மையாம் அறிவினைக் 
குழந்தையிற் கொண்டவன்.
குழந்தையின் தெளிவுக்கே தந்தையும் விடுகிறான்.

ஆர்வத்தின் விழிப்பிலே 
அவனறிந்து கண்டவன்.
நேர்மையாம் நெறியிலே 
வழியினைத் தேர்ந்தவன்.
வேலையைத் தேடாமல் 
வேலைகள் தருகிறான்.
சளைக்காமல் உழைப்பிலே கோபுரமாய்  உயர்கிறான்.

நூறான குடும்பஙகளின் சோறாகித் தாயுமானான்.
பேறு பெற்ற தாயவளின் 
பிள்ளையாய்ப் பேரானான்.
தன்திறன் தன்னை நம்பித் தன்னறிவில் உயர்கிறான்.
தந்தையவன் தவப்பயனால் விந்தையாகிவிளைகிறான்.

இரண்டு பத்து வயதினிலே 
எழுகிறான் முனைகிறான்.
இன்றுவரை வென்று உச்சி
நின்றுமே சிறக்கிறான்.
நாலு பத்து வயதுக்குள் 
நாடுகளைக் கற்கிகிறான்.
நாழிகையும் வீணின்றி 
தேடித்தேடி வெல்கிறான்.

இன்னும் எட்டுந் தூரந்தொட விண்ணோக்கி
விழைகிறான்.
இரவு பகல் என்றறியா 
எந்திரமாய் உழைக்கிறான்.
நடை பழகும் நாளிலேயே 
விடை தேறிக் கூடினான்.
நாளெல்லாம் ஓடுகிறான் 
நடக்கவும் மறக்கிறான்.

குமாரைப் பெற்றவரின் 
குலதெயவத் தவப்யனோ!
சமரிட்டு வாழ்ந்தக் கதை
சரித்திரம் ஏற்றினானோ!
உதாரணப் புருசனாய் 
ஊர் மெச்ச வாழ்கிறான்!
சதமாகச் சமூகத்தின் 
சாதனை செழிக்கிறான்!

வாழ்க அவன் புகழ்கண்டு, 
வளர்கவே உழைப்பென்று!
வீழ்கவே வறுமை விதி.
ஆள்கவே பெருமை மதி.
சூழ்கவே வளமெங்கும் 
சுதந்திரக் காற்றுண்டு!
வாழ்கவேவாழ்கவே
வாடாத நலங்கொண்டு!

கொ.பெ.பி.அய்யா.





















No comments:

Post a Comment