Wednesday, 29 January 2025

தென்றல் விடு தூது.

தென்றல்விடு தூது!!

தென் திசைத் தென்றலே
தேன் சுமந்து சீதனமோ!
தமிழ் அவளைக் காணவே.
தனியாகப் பயணமோ!.
வட திசை நோக்கியே
வழக்க மான உலாவாமோ!
பொதிகை மலைப் புறப்பட்டு.
போகும் வழி தூரமோ!

அகத்திய முனிவ ரவர்
ஆசிரம சேவ கனோ!
இகத்தினில் தழிழ் தந்த
இறைவனின் ஏவலனோ!
சுகம் தரப் பிறந்தநீ
சுரந்து வரும் ஆவலனோ!
யுக நலமாய் தமிழுக்கு
உகந்த சுகக் காவலனோ!

தாமிர பரணி ஆற்றில்,
தலை மூழ்கிக் குளித்துமே,
தேமதுர தமிழ் அணங்கை;
தேடி நீயும் செல்வாயோ!
குற்றாலச் சாரலிலே
குளிர்ந்து நீயும் சுகமாக,
அருவி யெலாம் நீராடி;
அப்புறமே தொடர் வாயோ!

நெல்லையில் அல்வாவும்,
நீ வாங்க மறப்பாயோ!
எல்லையில் காந்திமதி:
முல்லை சூடித் தொழுவாயோ!
நெல்வயல் நீண்டவழி,
நெடும் பயணம் கடந்துமே;
செல்வனவன் செந்தூரான்:
சேவடிகள் தரிசனமோ!

அலை வாயில் கடலாடி,
ஆண்டவனைக் கலந்தாடி;
அங்கிருந்தே குமரியவள்:
தங்கவொளி சேவிப்போ!
செங் கதிரோன் தங்கியே,
தூங்கி யெழும் காட்சியோ!
பொங்கும் நல் புத்துணர்வோ!
அங்கந் துள் அகமகிழ்வோ!

உவரி வந்து மாதாவை'
உளங்கனிந்து செபித்துமே,
காயல் பட்டண தர்காவிலே,
காலாற்றி தொழுதுமே!
வெற்றிலைத் தோட்டங்கள்,
சுற்றியும் சுவை மணந்து,
முற்றிய மா பலா வாழை,
பற்றி உடன்  கொண்டுவா!

ஆழக்கடல் தூத்துக்குடி,
ஆழத்தில் முத்தெடுத்து,
ஈழக்கடல் வீரத்தமிழ்,
வாழ்த்தி நீ துணை நாட்டி,
வாழுந்தமிழ் சிதம்ரனார்,
விட்ட கப்பல் தடம் பார்த்து,
கீழக்கரை மீனவரை,
கண்டுங் காயம் ஆற்றி வா!

பாதை யெலாம் உப்பளங்கள்
பரவி யெங்கும் பளபளக்கும்.
வேதனையில் தொழிலாளர்
வெந்துப் புண்ணில் வருந்துவர்.
ஊதி மெல்லப் புண்ணாற்றி,
உழைக்கும் வர்கம் தேற்றியே;
நாதி நீ அவர்க்கு வழி,
நல்லூக்கம் ஊட்டி வா!.

வரும் வழி மணியாச்சி,
வாஞ்சி வீரப் பேராச்சி..
கடம்பூரு போலி வாங்கி
கடந்து வா கொல்லநகர்.
கொல்லம்பரம்பு நல்ல நீர்,
குடிக்க சுவை வெல்ல நீர்;
குறுக்குச்சாலை சேவு திண்ணு:
குடித்துப்பார் வாய் மணக்கும்.

சுற்றியுள்ள ஊரெல்லாம்,
சுதந்திர விளை பூமி.
பற்றி வா தேசப்பற்று,
பரப்பியே தேசமெல்லாம்.
பாஞ்சாலம் ஓட்டப்பிடாரம்,
பக்கமே எட்டையபுரம்,
வ.உசி கட்டபொம்மன்;
வாழும் பாரதி அறிந்துவா!

கர்மவீர்ர் காமராசர்,
கண்ட ஊர் விருதுநகர்,
பரம ஏழை பாதம் தொட்ட;
பழைய மண் எடுத்துவா!
தென் தமிழ் நாடெல்லாம்,
தேடித் தேடிக் கண்டு வா!
சுதந்திர சுவாசமாய்,
இதமாகிப் பரந்து வா!

பக்கம்தான் மதுரையும்
பழந் தமிழ் சங்கத்தூர்.
நிற்குமே நாவில் சுவை,
நிற மல்லி இட்லி துவை.
திக்கெல்லாம் கோபுரங்கள்,
தேவி மீனாள் மகிமைகள்.
சொக்கனாதன் தடாகத்தை,
உக்கிப் போட்டு மூழ்கி வா!

ராமநாதன் பூமிகண்டு,
சேமநாடு சேதுபந்தம்,
தஞ்சை மண் தாண்டியும்
தமிழருமை கண்டாயோ!
காவிரியில் தாகமாற்றி,
கல்லணை கவியேற்றி,
பாவிரிக் களஞ்சியங்கள்:
பார்வையிட்டும் மகிழ்ந்தாயோ!

தஞ்சை நிலம் கொஞ்சி நீ!
நஞ்சை வளம் விஞ்ச நீ!
எஞ்சி வாழும் தமிழெ ரெல்லாம்,
மிஞ்சவே நலம் வாழ்த்து
இன்னும் மெல்ல முன்னே வா!
அன்னை வேளாங் கன்னித் தாய்,
விண்ணுயரக் கோபுரத்தாள்:
வேண்டும் வரம் வாங்கி வா!

பெரும் மழை பெய்யும் பூமி,
வரும் புயல் காக்கும் சாமி,
நாகூர் தர்கா வாழும்,
நாகூர்‌ ஆண்டவர் தீர்த்தம்,
வேண்டிப் பெற வினை தீரும்.
தாண்டிநீ வரவர 
திருவாரூர் தேரு வரும்.
திருவாசகப் பெருமானின் திருத்தலங்கள் கூடி வரும்.

திருவரங்கம் கண்டாயோ!
பெருமாளைத் தொழுதாயோ!
கோபுரத்து அழகதனைக்,
கூவி நீ புகழ்ந்தாயோ!
வீர நாச்சி பூமிகண்டு,
தீரன் சின்ன மலை புகழ்ந்து;
கொங்கு நாடு தமிழ் மணந்து:
தெங்கு நீர் பருகு  வாயோ!

வரும் வழி ஈரோடுதான்,
வாசம் மஞ்சள் மணம் வீசம்,
சுயமரி யாதைத் தந்தை,
பெரியாரின் புகழ் பேசும்.
சேலத்து மாங்கனிக்கு
காஞ்சிபுரம் பட்டுத் தந்து
கடமை கண்ணியம் கட்டுப்பாடு,
அறிஞர் வழிப் பற்றினாயோ!
அவர் புகழ் பாடினாயோ!

சென்னைக் கோட்டைத் தலைவாசல்,
முன்னைப் போர் வியந்தாயோ!
முன்னைப் புகழ் கூவநதி,
இன்னை வாசம் நுகர்ந்தாயோ!
வங்கக் கடல் மெரினாவில்,
சிங்கமவன் அண்ணாவுடன்,
தங்கமகன் எம்ஜியாரும்:
கண்ணுறங்கத் தாலாட்டோ!

நாடெல்லாம் சுற்றி நீ!
காடெல்லாம் பறந்தாயோ!
நதியெல்லாம் ஆடி நீ!
விதி யொன்றும் புரிந்தாயோ!
விவசாயப் பூமி இது,
அவசரத் தேவை அது,
இணைத் தெல்லா நதிகளை;
அணைகளுக்குத்  திருப்புவோம்.

போதுமோ சுற்றுச்சூழல்,
பூமியிது வாழ்வதற்கு!
எதிர் காலம் என்னாகும்!
என்பதும்நீ ஆய்ந்து சொல்.
பசுமை பரந்து வளமாக,
வறுமை நீங்கி நலமாக;
புதுமை கண்டு துணிவாக:
புரட்சிவழி ஒன்று சொல்!

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment