Tuesday, 18 February 2014

சொல்லத்தான் நினைக்கிறேன்

சொல்லத்தான் நினைக்கிறேன்.

சொல்லத் துணியாக் காதல்
வெல்லும் விதியால் சாகும்.
ஒல்லும் போதில் சொல்லும் காதல்
செல்லும் காதல் ஆகும்.

வெயில் குளியா செடிகள் 
துயில் படர்ந்து சாகும்.
 துணிய முனையுங் காதல்
இனிதே வாழல் ஆகும்.

பாடிப் பழகா குரலும் 
பாட்டொழிந்து சாகும்.
தேடி அணையும் காதல்
கூடிக்கூடல் ஆகும்.

ஊமைக் காதல் பாவம் 
ஒரு தலையாய் சாகும்.
வீரமுள்ள காதல் வென்றும்
தேரும் நிலைஆகும்!

திறந்து மூடா வீடும் தான்
கரையானால் சாகும்!
திறந்து வாய் சொன்னால் தானே
தெரியுங் காதல் ஆகும்!

முதல் முந்தும் தயக்கம்தான்
முளைக்காமலே சாகும்!
இதழ் விரித்த காதல்தானே
இனிக்கும் கனி ஆகும்!

பருவம் விதையா விதையுந்தானே
அருவி அதுவே சாகும்.
தருணம் ஆய்ந்து கதைக்கும் காதல்
திருமணமே ஆகும்.

கொ.பெ.பி,அய்யா.

No comments:

Post a Comment