Tuesday, 18 February 2014

பாரதமே சொர்கம்.

பாரதமே சொர்க்கம்!!

முந்திய நாகரிகம் உயர்
மூத்த குடிமக்கள்.
விந்திய மலை முட்ட
வேண்டிய செல்வங்கள்.
இந்தியத் திரு நாட்டின்
இருப்பென் றெண்ணியே
வந்த முதலை யெல்லாம்
வாரிச் சென்றதோ!

பொறுமைப் பூமி இதே!
பொக்கிசக் களஞ்சியமே!
வறுமைப்பட்டு பின்
வாடி நின்றதே!
பெருமைக் குலைந்து தன்
பிள்ளைப்பசி போக்கவும்
திருமை நாடுகள் முன்
நாடியும் நின்றதோ!

அடிமை செய்தவன் தளை
அறுத்து ஏகினாலும்.
விடிவு வருமென இமை
விழிக்கும் வேளையில்
தடித்த மனத்தினர் தலை
தூக்கிச் சிரித்தனர்..
பிடித்து வளைத்துக் கொள்ளை
அடித்துக் கொடுத்தனர்.

குடும்பம் குடும்பமாய்
கொத்தடிமைக் கோலம்.
கொஞ்சங் கொஞ்சமாய்
குறைந்திட்ட போதும்
பிஞ்சு இளசுகள் கஞ்சிக்காக
நஞ்சுக் கொடியோரின்
வஞ்சக ஏவலில் நைந்து
வாடுவதோ பாவம்.!.

ஒட்ட ஓர் இடமில்லை.
  ஓரம் தேடி உறங்குது.
கட்டில் தேடும் இளசுகளோ
 காடுகளிலில் மறையுது.
தொட்டில் ஆடுங் குழந்தைகளோ
 தொட்டி களில் கதறுது.
மொட்டில் வாடும் பிஞ்சுகளோ
 தட்டில் பிச்சை கேட்குது.

வயிற் றிற்கு சோறில்லை
வழிப் பறிகள் செய்யுது.
பத்து மாதம் சுமந்துபெற்ற
பால கரை விற்குது.
வேலை யேதும் இல்லாமல்
வீதிகளில் நிற்குது.
வறுமை செய்யும் கொடுமையில்
வழிதவறிச் செல்லுது.

இந்த நிலைமாற அரசு,
ஏற்றிடும் திட்டமெல்லாம்,
வந்திடும் வழிகளிலேயே
சந்துகளில் ஒளிகிறது..
எந்த நிலையிலும் இங்கே
எவருமே சரியில்லை.
சொந்தமாகுமோ அந்தச்
சுடு காடும் பாவியர்க்கும்!

என்னதான் செய்யலாம்
ஏதாவது சொல்லுங்கள்.
பாவம் இந்த ஏழைகள்
பசி தணிக்க உதவுங்கள்.
ஊழல் செய்யும் கோழைகளை
உணர வழிச் செய்யுங்கள்.
பாழ் படுத்தும் பாவியரை
நாள் கொடுத்துத் தூக்குங்கள்.

ஆள் எண்ணித் தேடுவீர்!
அடிமைத்தனம் நீக்குவீர்!
தனி நிலைப் பொருளாதாரம்
நனி நிலை தேக்குவீர்!
இல்லாரே இல்லாமை
வல்லரசு ஆக்குவீர்!
நல்லாண்மை கொண்டுமே
வல்லாண்மை நிலை செய்வீர்!

புதியதாய் விடியல் நோக்கி
புதுமைகள் தேடுவோம்.
நதிகளும் கடல் மறக்க
நல்லணைகள் கட்டுவோம்,
பசுமையின் வண்ண மெங்கும்
பாரெங்கும் பரப்புவோம்.
பசியே மறந்தோ மென
பாரதமே சொர்க்க மென்போம்.

கொ.பெ.பி.அய்யா.










No comments:

Post a Comment