Tuesday, 18 February 2014

என்னதான் பேசியிருக்கும்!

உடலும் உயிரும்

விடியலே நீ வாழ்க!இனி
வெளிச்சத்தில் உண்மையை
வெளிக்காட்டு எனச்சொல்லி
இரவு விலகியிருக்கும்.

அரும்பியதுக் காய்க்கட்டும் என
விரும்பியே செடியிடம்
விடை பெற்றிருக்கும்
உதிர்ந்த மலர்கள்.

இதற்கு மேலும் வேண்டாம்
இந்த உலகம்.
இங்கே சொர்க்கம் இல்லை.
நரகம் மட்டுமே!
இருவருமே ஒருவரை ஒருவர்
விட்டு விடுதலையாவோம்-என
உடலும் உயிரும்
ஒன்றுக்கொன்று நன்றிக் கூறி
விடுதலை பெற்றிருக்கும்.

உனைக் காய்த்தப் பாவியரிடம்
உனக்காக நானழுகிறேன்
எனக்கூறி வானிடம் கண்ணீராய்
மழைத்துளி விடை பெற்று
வானின்று இறங்கியிருக்கும்..

நட்சத்திரங்களை விரட்டி விட்டதாக
நிச்சயமில்லாக் கரைநிறை நிலா
எத்தனை சாமங்கள்தான் பாவம்!
வீண் பெருமை அடிதுக்கொண்டதோ!-என
நிலவில்லாதபோது மீன்களிடம்
வான் புறம்பேசியிருக்கும்!

எத்தனை முறை எச்சரித்தேன்
என்னை மதித்தாயா நீ?
வீணாசை விபரீத விளைவாச்சோ!-என
ஊழல் கைதியிடம் மனம்
சொல்லிக்காட்டி நொந்திருக்கும்.

இவன் உன் கட்சிக்காரன்
என்ற தகுதியைவிட இவனிடம்
வேறென்ன தகுதியுண்டோ!
சிந்திக்க விட்டனரா உன்னை?
இன்னும் அடிமைதானா நீ?
பழகிப்போன உன்னிடம்
உன்னுரிமையை நீ
சரியாகப் பயன்படுத்தெனச்
சொன்னால் கேட்கவா போகிறாய்-என
வாக்காளனிடம் வாக்குச்சீட்டு
சொல்லித்தானிருக்கும்.

பாவம் நீ!
நல்லாத்தான் எழுதியுள்ளாய்.
நானும் பெருமை அடைகிறேன்--ஆனாலும்
நீ இருக்கும் வரை என்னைத்
தேடமாட்டார்களே!-என
விரல்களிடம் எழுத்து ஆதங்கப்பட்டிருக்கும்.  . 

கொ.பெ.பி.அய்யா


குறிப்பு:
அகன் படைப்பு:-
இவை என்ன சொல்லியிருக்கும்

அதற்குச்சொன்னக் கருத்துப் பதிவு.

No comments:

Post a Comment