Tuesday, 18 February 2014

எழுத்தே துணை.

அறிவுக்கு மஞ்சமில்லை!

வாலிபம் தொலைந்தாலும்
வாழ்ந்தும் அலுத்தாலும்,
வயதை மதிக்கவில்லை-பாழ்
முதுமை எனக்கில்லை.

ஏதும் சேர்க்கவில்லை,
எதையும் இழக்கவில்லை,
எழுத்தன்றி வேறில்லை-ஏதும்
எனக்கென்று ஆசையில்லை.

பொருளுக்கும் ஆசையில்லை
பொய்க்கவும் தேவையில்லை.
அருளுக்குக் குறைவில்லை--எழுதும்
வரத்துக்கும் வரைவில்லை.

காவலும் எனக்கில்லை
காத்திடக் கனமில்லை.
ஏவலும் ஆருமில்லை--வீணே
எதிர்ப்பார் யாருமில்லை.

மனத்திற் கவலையில்லை
இனத்திற் பகையில்லை.
பணமும் நாடவில்லை--உதவுங்
குணமும் தேடவில்லை.

கற்றதும் நிறைவில்லை
கருத்தினில் மறைவில்லை.
படைப்புக்கு அழிவில்லை--நூல்
பதிப்பிக்க வழியில்லை.

உறவுக்குப் பஞ்சமில்லை
உதவிக்குத் தஞ்சமில்லை.
அறிவுக்குப் பஞ்சமில்லை--அதன்
ஆக்கத்தில் வஞ்சமில்லை.

விதியையும் நம்பவில்லை
நிதியையும் எம்பவில்லை
மதியன்றி வேறில்லை-நற்
கதியுண்டும் ஐயமில்லை.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment